Saturday, January 21, 2023

கோதாஸ் காபி !



கோதாஸ் காபி 

சுவைக்கும் மாந்தர்களே.... 


சிறிது 

கோதையின் தமிழையும் 

சுவையும்.... 


உண்மை சுவை 

புரியும் !

Friday, January 20, 2023

கொடி விற்பவள் !

 







நாற்புற சாலையில் 

வாகனங்கள் விரைகின்றன...


தேசியக் கொடியை 

விற்பவள் நடுத்தெருவில்...


கொடி ஒன்றை வாங்கி 

நாற்றுப் பற்றைக் காட்டி விட்டோம்...


கொடி விற்பவள் அடுத்த நபரை 

நோக்கி செல்கிறாள்...


கொடி காற்றில் அசைந்த போது 

மனமும் அலைகிறது... 


சுதந்திரம் அடைந்து விட்டோம் ?

Monday, May 7, 2018

ரயில் ஸ்னேஹம்

தயக்கமே தொடக்கம் தொடக்கமே தயக்கம்

"எங்க போறீங்க?" என்பது தான் ஓப்பனிங் டயலாக்

ஓ அந்த ஊரா ? அங்க எங்க பெரியம்மா இருக்காங்க.

அப்புறம் "உங்க பேர் என்ன ?" என்பதிலிருந்து விடாமல் பேசுவோம்

அட்ரஸ் தொலைபேசி எண் பரிமாற்றம் நடக்கும்

இறங்கும் ஸ்டேஷன் வரை ஓயாமல் பேசுவோம்

இந்த நீர்க்குமிழி நட்புக்காக......

Sunday, December 4, 2016

கட்டிட தொழிலாளர்கள்



கட்டிட தொழிலாளர்கள்


பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

இருப்பதுவோ ஓலை வேய்ந்த குடில்களில்



மற்றவர்களை உயரச் செய்து

நாங்கள் தாழ்வாகவே இருக்கிறோம்



கட்டிடங்களை உயர்த்துகிறோம் ஆயினும்

எங்கள் வாழ்க்கை தரம் உயர்வதில்லை



பத்து மாடி கட்டிடம் கட்டியவர்கள் நாங்கள்

ஓலை வேய்ந்த குடிலே எங்கள் நிறைந்த பங்களா



ஆனந்த் வாசுதேவன்

Thursday, March 3, 2016

புரிதல் துவங்கட்டும்!  

சுழலும் பூமியில் 
உழலும் மனிதா - சற்று நில்

எங்கே விரைகிறாய்
எதை தேடுகிறாய் - சற்று அமர்

அமைதியின்றி வாழ்கிறாய்
நிம்மதியின்றி உறங்குகிறாய் - சற்று யோசி

நீ யார் என்பதை தெரிந்து கொள்
வெளி மனதை உள்ளே திருப்பு - சற்று சிந்தி

அனைத்தும் அவனே 
அதில் நீயுமோர் துளி - சற்று உணர்

சரணடைந்து பக்தி செய்
அனைவரிடம் அன்பு செய் - புரிதல் துவங்கட்டும்!  

ஆனந்த் வாசுதேவன்
28.02.2015

Sunday, January 2, 2011

Tamil Poem - Haiku















எந்திர உலகம்

எந்திர வாழ்க்கையின்
மாறுதலுக்காக
கோவிலுக்குச் சென்றேன்

வாத்தியம் வாசிக்க ஆள் இல்லாததால்
பூசாரி மின் இசைக் கருவியின்
சுவிட்சை "ஆன்" செய்கிறார்!



உப்பு

கடலில் பிறந்து
உணவில் கரைந்து
உணர்வில் கலப்பவர்கள் நாங்கள்




குழந்தைத்தனம்

திங்கட் கிழமை காலை
குழந்தையை தேற்றி
அனுப்பினேன் பள்ளிக்கு

என்னைத் தேற்றி
அனுப்பினாள் என் மனைவி
அலுவலகத்துக்கு!


அவசர உதவி?!

விரைந்து சென்ற
ஆம்புலன்ஸ் மோதி
இருவர் கவலைக்கிடம்
என்ன கொடுமை சரவணன் இது?






A.V. தேவன்
சென்னை – 3/1/2011

Saturday, September 18, 2010

பூமித்தாய்












பூமித்தாய்


இறைவன் அம்பரத்தில் விட்ட பம்பரம்
வராக மூர்த்தியின் முயற்சி
வந்தது உன் சுழற்சி
யுகங்களாய் சுற்றினாலும் ஏற்படவில்லை அயர்ச்சி

மணிக்கு ஆயிரம் மைல் வேகம்
தெரிகிறது உன் இளமையின் மோகம்

சூரிய குடும்பத்தின் மூன்றாவது குழந்தை
நீர் இருக்கும் ஒரே இடம்
இது ஜீவராசிகளின் பிறப்பிடம்
பிறப்பு இறப்பு நடக்கும் ராட்சத தொழிற்சாலை

முன் பாதி வெளிச்சம்
பின் பாதி இருட்டு
கூச்சமாக இருப்பதினாலோ
உன்னை நீ பாதி மூடிக்கொண்டு இருக்கிறாய்

வான வெளியில் நீலப் பந்து
பால் வெளியில் வீதி உலா
உன்னை சுற்றித் திரியும் வெண் நிலா

கொண்டிருப்பது 70 சதவிகித ஜலம்
அதிலே நீ காட்டுகிறாய் உன் மாயா ஜாலம்

நீ திரும்பிப் படுத்தால் நிலநடுக்கம்
பெருமூச்சு விட்டால் சூறாவளி
கொந்தளித்தால் புயல்
கோபப்பட்டால் எரிமலை
சோம்பல் முறித்தால் சுனாமி
நீ அமைதியாக இருக்க என்ன கேட்கிறாய் ?


வட துருவம் தென் துருவம்
காண்கிறோம் உன் பனிப் பருவம்
நதியின் ஓட்டம் உனது ரத்த நாளம்
கால மாற்றம் நீ போடும் தாளம்


மலையை உடைத்து சிமெண்ட் செய்கிறோம்
பூமியை பிளந்து தங்கம் எடுக்கிறோம்
நிலக்கரியையும் பிற கனிமங்களையும் விட்டுவைக்க வில்லை நாங்கள்

நீ எங்களுக்கு இடுகிறாய் அன்னம்
பதிலுக்கு ஆக்குகிறோம் உன்னை சின்னாபின்னம்


அதிகரிக்கும் உன்னுடைய வெப்ப நிலை
மனிதன் வெட்கித் தலை குனியும் நிலை
ஒசோனிலே இருக்கும் ஓட்டை
விளக்குகிறது அவனது பேராசை என்னும் நிலை கேட்டை


நான் நிற்காமல் ஓட
ஓ மனிதா
கொஞ்சம் நின்று யோசிப்பாயா?


ஆ. வா. தேவன்
சென்னை