Saturday, September 18, 2010

பூமித்தாய்












பூமித்தாய்


இறைவன் அம்பரத்தில் விட்ட பம்பரம்
வராக மூர்த்தியின் முயற்சி
வந்தது உன் சுழற்சி
யுகங்களாய் சுற்றினாலும் ஏற்படவில்லை அயர்ச்சி

மணிக்கு ஆயிரம் மைல் வேகம்
தெரிகிறது உன் இளமையின் மோகம்

சூரிய குடும்பத்தின் மூன்றாவது குழந்தை
நீர் இருக்கும் ஒரே இடம்
இது ஜீவராசிகளின் பிறப்பிடம்
பிறப்பு இறப்பு நடக்கும் ராட்சத தொழிற்சாலை

முன் பாதி வெளிச்சம்
பின் பாதி இருட்டு
கூச்சமாக இருப்பதினாலோ
உன்னை நீ பாதி மூடிக்கொண்டு இருக்கிறாய்

வான வெளியில் நீலப் பந்து
பால் வெளியில் வீதி உலா
உன்னை சுற்றித் திரியும் வெண் நிலா

கொண்டிருப்பது 70 சதவிகித ஜலம்
அதிலே நீ காட்டுகிறாய் உன் மாயா ஜாலம்

நீ திரும்பிப் படுத்தால் நிலநடுக்கம்
பெருமூச்சு விட்டால் சூறாவளி
கொந்தளித்தால் புயல்
கோபப்பட்டால் எரிமலை
சோம்பல் முறித்தால் சுனாமி
நீ அமைதியாக இருக்க என்ன கேட்கிறாய் ?


வட துருவம் தென் துருவம்
காண்கிறோம் உன் பனிப் பருவம்
நதியின் ஓட்டம் உனது ரத்த நாளம்
கால மாற்றம் நீ போடும் தாளம்


மலையை உடைத்து சிமெண்ட் செய்கிறோம்
பூமியை பிளந்து தங்கம் எடுக்கிறோம்
நிலக்கரியையும் பிற கனிமங்களையும் விட்டுவைக்க வில்லை நாங்கள்

நீ எங்களுக்கு இடுகிறாய் அன்னம்
பதிலுக்கு ஆக்குகிறோம் உன்னை சின்னாபின்னம்


அதிகரிக்கும் உன்னுடைய வெப்ப நிலை
மனிதன் வெட்கித் தலை குனியும் நிலை
ஒசோனிலே இருக்கும் ஓட்டை
விளக்குகிறது அவனது பேராசை என்னும் நிலை கேட்டை


நான் நிற்காமல் ஓட
ஓ மனிதா
கொஞ்சம் நின்று யோசிப்பாயா?


ஆ. வா. தேவன்
சென்னை

No comments:

Post a Comment